தமிழ் மொழியை சீரழிக்காதீர்கள்!


தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் அனைத்தும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் சமகால இளைய தலைமுறையினர் மத்தியில் இலக்கிய உணர்வு வெகுவாக குன்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இன்று இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 தொடர்ந்தும் பேசிய அவர்,

 “இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவும், கலை நயம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். நவீன இலத்திரனியல் யுகத்தில், இலத்திரனியல் கருவிகளுடன் கூடிய நாட்டங்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர். இதனால் இயற்கையின் எழில் கொஞ்சும் அழகையும் அதன் ஆரோக்கிய சூழ்நிலையையும் அறிய தவறியவர்களாக வேறொரு செயற்கைப் பரிமாணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெறுகின்ற போதும் இயற்கையின் அழகும், இயற்கை எமக்குத் தரும் கொடைகளையும் ரசிக்கக் கூடிய வகையில் இளைய தலைமுறையினர் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.



 இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் மொழியைச் சீரழிக்கும் செயற்பாடுகள் அனைத்தும் கண்டிக்கத்தக்கது. இன்றைய தொடர்பாடல் சாதனங்கள் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை உணர முடியாதவாறு மழுங்கடிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. இது பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை எடுத்துக் காட்டுவதாக அமையலாம். எனினும், இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கை தான். இதை எங்கள் இளைய தலைமுறையினர் உணர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.