ராஜபக்ஷகளுக்கு விரிக்கப்படும் வலை!
ராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘அரசாங்கம் விசேட நீதிமன்றக் கட்டமைப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. எனினும் அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். குறித்த சட்டமூலத்தினூடாக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். எனினும் அந்நீதிமன்றத்தினூடாக நிச்சயமாக அவர்கள் திருடர்களைப் பிடிக்கப்போவதில்லை.
மக்கள் ஆதரவுபெற்ற அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அந்நீதிமன்றத்தை அமைக்க முனைகின்றனர். நல்லாட்சி அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்திற்கும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றது.
இதன்மூலம் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கவும் முயற்சி செய்கின்றது’ என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை