ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய தலைவர் யார்?

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய தலைவர் யார் என்பதை கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தயாராக இருந்தால், அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பாடுவார்களாயின் தாம் அதனை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பலம் ஐக்கிய தேசியக்கட்சியிடம் இருப்பதாகவும் காவிந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஊழல் மோசடி மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, பிரதமர் ரணிலுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தனர்.
இதில் ஒன்றிணைந்த எதிரணியின் 55 பேர் கையெழுத்திட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படும் நான்கு பேர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.