லசந்த படுகொலை விசாரணை தொடர்கிறது!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படு கொலை தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு, பாராளுமன்றில் லசந்தவின் கொலை தொடர்பில் பேசப்பட்ட சில ஹன்சார்ட் அறிக்கைகளை மேலதிக விசாரணைகளுக்காக கோரியுள்ளது.
இது தொடர்பில் கல்கிஸை நீதிவான் மொஹம்மட் மிஹாலிடம் இடையீட்டு மனுவூடாக குற்றப் புலனாய்வுப் பிரிவு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. அத்துடன் லசந்த விக்ரமதுங்க பயன்படுத்திய வங்கிக்கணக்குகள் தொடர்பிலான விபரங்களை அந்தந்த வங்கிகளூடாகவும் அவர் தொடர்புகளை முன்னெடுத்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குறித்த தொலைபேசிச் சேவை வழங்குநர் நிறுவனங்கள் ஊடாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை கோரியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள கல்கிைஸ நீதிவான் நீதிமன்றம், ஹன்சார்ட் அறிக்கை, தொலைபேசி தொடர்பிலான விபரமான அறிக்கை மற்றும் வங்கிக்கணக்குகள் குறித்த அறிக்கைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு கையளிக்க, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், முகாமையாளர்களு க்கு தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள் ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திடியவில் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த போது லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் சிறப்பு விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திஸேராவின் கீழ் பொலிஸ் பரிசோதகர்களான நிசாந்த சில்வா மற்றும் சுதத் குமார ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு முன்னெடுத்துள்ளது. இதன்போது லசந்த சுட்டுக் கொல்லப்படவில்லை என்பதையும் அவர் கூரிய ஆயுதமொன்றினால் தலையில் பலமாக தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் ஊடாக நிரூபித்துள்ளது.
அதன்படி சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியான பிரேமானத்த உடலாகம என்பவரையும் பொலிஸார் கைது செய்த நிலையில் பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. லசந்த கொலையின் சாட்சியாளர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் லசந்த கொலை தொடர்பில் சாட்சியங்களை மாற்றியமை, அழித்தமை தொடர்பில் முன்னாள் கல்கிஸை குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி சுகந்தபால வும் மேல் மாகாணத்தின் தென்பகுதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக் காரவும் கைது செய்யப்பட்டு தற்போதும் விளக்கமறியலில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை