சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண சசிகலா பரோலில் வருவார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதையடுத்து உடல்நலன் தேறினார்.
ஒரே மாதத்தில் நடராஜன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் தான் வழக்கமாக வசிக்கும் வீட்டில் இருக்காமல், உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார் நடராஜன். இந்நிலையில் இன்று திடீரென ம. நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வர வாய்ப்பிருப்பதாகவும், பரோல் கேட்டு சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.