தாக்குதலில் பொலிஸ் பரிசோதகர் பலி!

மட்டக்களப்பு மைலாம்பாவெளி ஆலயத்திற்கு காரில் சென்று வழிபட்டுவிட்டு அங்கிருந்து காரில் ஏறுவதற்கு முற்பட்டவர்களை கொள்ளையர் குழு ஒன்று கொள்ளையடிக்க முற்பட்டதுடன் தாக்கதல் நடத்திய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. 

இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அத்துடன் கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் குருநாகல் அலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எம் . ஹேரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பொலிஸ் அதிகாரி சாவகச்சேரியில் உள்ள அவரது குடும்ப நண்பர்களுடன் மட்டக்களப்பிற்கு ஆலயங்களை வழிபாடு செய்ய நேற்று முன்தினம் வியாழக்கிழமை கார் ஒன்றில் வந்து விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். 

இதனையடுத்து சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மைலாம்பாவெளி ஆலயத்தில் வழிபட்டுவிட்டு ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் ஏற முற்பட்ட போது கொள்ளையர் குழு ஒன்று அவர்களை நெருங்கி கூரிய ஆயுதங்களை காட்டி கொள்ளையிட முற்பட்போது இரு தரப்புக்கும் இடையில் கைகலகப்பு இடம்பெற்றுள்ளது. 

கைகலப்பையடுத்து அவ்விடத்துக்கு சென்ற பொதுமக்கள் கொள்ளையர்கள் 3 வரை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தன. 

அதேவேளை கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்து கீழே வீழ்ந்த பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கைது செய்யபட்ட கொள்ளையர்கள் ஏறாவூர் தன்னாமுனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.