நாளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி!
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் 138 தங்கப் பதக்கங்களுக்கு குறிவைத்து 2,500க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் 56ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
சுகததாச விளையாட்டரங்கில் 250 மில்லியன் ரூபா செலவில் புதிதாக பதிக்கப்பட்டுள்ள ஓடுபாதையில் முதலாவது போட்டியாக இப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்னும் ஒரு வாரத்தில் இதே அரங்கில் நடைபெறவுள்ள கனிஷ்ட தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிக்கான திறன்காண் போட்டியாக கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் அமைவதால் மெய்வல்லுநர்களின் ஆற்றல் வெளிப்பாடுகள் உயரிய நிலையில் இருக்கும் என இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டது.
தியகம, மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற 55 கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 21 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதால் இம்முறை புதிய அதனைவிட சாதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் புதிதாக பதிக்கப்பட்டுள்ள செயற்கைத்தள (சின்தட்டிக்) ஓடுபாதையில் இவ் வருடப் போட்டி நடைபெறுவதால் இம்முறை கடும் போட்டி நிலவும் என நம்பப்படுகின்றது.
நான்கு தினங்கள் நீடிக்கவுள்ள இப் போட்டிகளின் ஆரம்ப தினத்தன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள முதலாவது நிகழ்ச்சியான பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவி அனிதா ஜெகதீஸ்வரன் இம்முறையும் சிறந்த பெறுதியை பதிவு செய்வார் என நம்பப்படுகின்றது.
தொடர்ச்சியாக தனது சொந்த தேசிய சாதனையைப் புதுப்பித்துவரும் அனிதா இம்முறை 3.48 மீற்றர் என்ற சாதனையை மீண்டும் புதுப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவரைவிட அருணோதயா மாணவன் நெப்தலி ஜொய்சன், சாவகச்சேரி இந்து மாணவன் ஆர். புவிதரன் ஆகியோருக்கு இடையில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கடும் போட்டி நிலவவுள்ளது.
அத்துடன் ஹார்ட்லி கல்லூரியின் வி. யதார்த்தன், எஸ். பிரகாஸ்ராஜ் ஆகிய இருவரும் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட சம்மட்டி எறிதல், பரிதிவட்டம் எறிதல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதல், குண்டு எறிதல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் சிறந்த பெறுதிகளைப் பதிவு செய்து சாதனைகளை நிலைநாட்டவும் உறுதிபூண்டுள்ளனர்.
இவர்களை விட தென் பகுதி வீர, வீராங்கனைகளும் அதி உயரிய ஆற்றல்களை வெளிப்படுத்தி சாதனைகளை நிலைநாட்டுவதுடன் கனிஷ்ட தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அடைவு மட்டத்தைக் கடப்பதற்கு முயற்சிக்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை