மோதல் ஒன்றில் சிக்குண்டு வயோதிபர் பலி! இருவருக்கு பலத்த காயம்!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் ஒன்றில் சிக்குண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை மோதலில் ஈடுப்பட்ட இருவர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வட்டவளை தோட்டத்தைச் சேர்ந்த இருவர் தங்களது வீட்டிற்கருகில் மது அருந்திவிட்டு வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதுடன், இவ் வாய்தர்க்கம் பின் சண்டையாக மாறியுள்ளது.
சண்டை தொடர்ந்த நிலையில் இருவரும் மாறி மாறி கற்களால் தாக்கிக்கொண்டுள்ளனர். இதற்கிடையில் சண்டையை விலக்குவதற்காக சென்ற அதே தோட்டத்தைச் சேர்ந்த செங்கம் பொன்னுசாமி 73 வயதுடைய நபர் கல் தாக்குதலுக்கிலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த முதியவரின் சடலம் தற்பொழுது வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலில் ஈடுப்பட்ட இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களை பொலிஸார் கைது செய்து வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் தொடர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.