செல்வம் அடைக்கலநாதனின் உட்கட்சி சதியால் தேசிய கட்சிகளிடம் வீழ்ந்த வவுனியா.!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பாலான சபைகளில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதும் அதனால் கூட்டாட்சி முறையில் சபைகளை அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்போம்.
அந்த வகையில் இவ் ஊடகங்களுக்கு வராத மறைக்கப்பட்ட சங்கதிகளை வெளிக்கு கொண்டு வருவதே Voice of Vanni இன் பணியாகக் காணப்படுகிறது. இதனூடாக எமது மக்களுக்கான கட்சி சார்பற்ற நடுவுநிலையான செய்திகளை வெளிக்கொண்டு வருவதற்கான எமது சுதந்திர ஊடகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த நாட்களில் வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது பற்றியும், வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையை உதயராசாவின் ஸ்ரீடெலோ கைப்பற்றியது பற்றியும் அறிந்திருப்பீர்கள். எனினும் இது தொடர்பில் வெளிக்கு வராத சங்கதிகளை வெளிப்படுத்த வேண்டியது நடுவுநிலை ஊடகம் என்ற வகையில் எமது Voice of Vanni இன் கடமையும் பொறுப்புமாகக் காணப்படுகிறது.
அந்த வகையில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வவுனியா நகரசபையிலிருந்து செல்வம் அடைக்கலநாதனின் டெலோ விலகியதும் நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் வவுனியா நகரசபையில் கடந்த காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து படுகொலைகள் மற்றும் கப்பம் பெறல் போன்ற செயல்களில் ஈடுபட்ட புளொட் கட்சியின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. அத்துடன் கடந்த 2009ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் புளொட் கூட்டமைப்பை அச்சுறுத்தியதும் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈபிஆர்எல்எப் கூட்டமைப்புக்கு பாதுகாப்பு வழங்கியதும் வரலாறு.
எனினும் இம்முறை தேர்தலில் டெலோ கட்சியின் ஆதிக்கம் உள்ள வைரவபுளியங்குளம் மற்றும் திருநாவற்குள வட்டாரம் டெலோவிற்கு வழங்கப்படாமல் புளொட்டுக்கு வழங்கப்பட்டது. இதனாலேயே டெலோ வவுனியா நகரசபை போட்டியிலிருந்து வெளியேறியது. அத்துடன் அன்றிலிருந்து வவுனியா நகரசபையில் புளொட்டுக்கு எதிராக பல்வேறு இரகசிய பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் திருநாவற்குள வட்டார புளொட் வேட்பாளர் காண்டீபன் மற்றும் திருநாவற்குள டெலோ வேட்பாளர் ரதீபன் ஆகியோருக்கு இடையில் ஒரு பனிப்போர் இடம்பெற்றது.
அத்துடன் புளொட்டின் கோட்டையாக காணப்பட்ட வெளிக்குளம் பகுதிகளை புளொட் கட்சியினர் டெலோவுக்கு வழங்கி டெலோவை மறைமுகமாக முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். அத்துடன் வவுனியா நகரசபை தேர்தலில் பெரியளவான எந்த ஒரு பிரச்சாரத்திலும் டெலோ ஈடுபடாது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினர். அத்துடன் டெலோவின் மேலதிக நகரசபை வேட்பாளர் ரதீபன் வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேரடியாக சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இதேவேளை கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் எனப்படும் ஜனா உள்ளிட்டவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தனை சந்தித்தனர். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு பொதுச் சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடகிழக்கு முழுவதும் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் இது தொடர்பில் கட்சியின் தலைவர் சம்பந்தருடன் கதைக்குமாறும் கூறினர். இதனைக் கதைப்பதாகவும் தமது கட்சி தவிசாளராக போட்டியிடும் சபைகளுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் இச் சந்திப்பு தொடர்பான விடயங்களை ஒரு மாதத்துக்கு அதிகமாக செல்வம் அடைக்கலநாதன் மறைத்து வைத்திருந்த போதும் நகரசபை ஆட்சி அமைப்பதற்கு முதல்நாள் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் செயலாளர் சத்த்தியசீலனுடனான சந்திப்பின் போது சிவசக்தி ஆனந்தன் இந்த விடயத்தை போட்டுடைத்தார்.
இதேவேளை வவுனியா நகரசபையில் ஆட்சி அமைக்கும் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் இணைந்து பயணிக்க கூடாது என்பதில் செல்வம் அடைக்கலநாதன் தெளிவாக இருந்தார். அதாவது தனது வைரவபுளியங்குள வட்டாரத்தில் இருந்து தவிசாளராக சேனாதிராஜா என்பவர் வருவதை டெலோ தலைமைத்துவம் விரும்பவில்லை. அத்துடன் தமது அரசியல் எதிரியாகிய புளொட் வவுனியா நகரசபையில் ஆதிக்கம் செலுத்துவதையும் செல்வம் அடைக்கலநாதனும் அவரது கட்சியும் விரும்பவில்லை. இதனாலேயே விடுதலை கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க விரும்பிய சத்தியலிங்கத்தின் முயற்சிகளை செல்வம் அடைக்கலநாதன் குழப்பினார்.
அத்துடன் வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக கூட்டமைப்பின் சார்பில் புளொட் சிவம் எனும் கேதீஸ்வரன் போட்டியிடுவதாக தகவல் கிடைத்ததும் அதனை தட்டிப்பறிக்க கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து தமிழின விரோத அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உதயராசாவின் ஸ்ரீடெலோவுடன் இரகசியமாக ஒப்பந்தம் ஒன்று செல்வம் மற்றும் வினோவால் செய்யப்பட்டது. அதாவது எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உதயராசாவிற்கு ஆசனம் வழங்குவது என்றும் அதற்காக உதயராசாவின் ஸ்ரீடெலோவை செட்டிகுளத்தை கைப்பற்றுமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மஸ்தான் குழுவினருக்கு ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டெலோ ரவியை தவிசாளர் ஆக்குவதுமாகும். இதனை உதயராசா கச்சிதமாக செய்துமுடிக்க கூட்டமைப்பு சார்பில் டெலோ வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது.
இதேவேளை உபதவிசாளராக வவுனியா வடக்கு மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபையில் புளொட் கட்சியின் உறுப்பினர்கள் வர இருந்த சூழலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் டெலோவின் உறுப்பினர் யோகராசாவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஆட்சி அமைத்தது. இதேவேளை ஸ்ரீடெலோ கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செட்டிகுளம் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஆட்சி அமைத்தன. அத்துடன் வவுனியா நகரசபையில் ஈபிடிபி கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த வேளை நெடுந்தீவு பிரதேச சபை ஈபிடிபி வசம் வரவிருந்த சூழலில் குழப்பிய சிவாஜிலிங்கத்தின் வரவு ஈபிடிபியை எதிராக வாக்களிக்கச் தூண்டியது.
இதனால் வவுனியாவில் தமிழரசு கட்சி மற்றும் புளொட் போன்றன மண்ணை கெளவியதுடன் செல்வம் அடைக்கலநாதன் தனது இலக்கை அடைந்துள்ளார் என்பதே உண்மை. இதேவேளை சத்தியலிங்கம், சுமந்திரன், சித்தார்த்தன், மஸ்தான், மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள், அமைச்சர் ரிசாத் என்போரே முட்டாளாக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.