அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் (வயது 34). ஜமைக்காவில் பிறந்த இவர் கருப்பு இனத்தவர் ஆவார். இவர் புரூக்ளின் நகரில் ‘வெல்டிங்’ வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் தன் கையில் இரும்பு குழாய் ஒன்றை வைத்திருந்தார்.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவர் கையில் வைத்திருந்த இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து, அச்சம் அடைந்து, போலீஸ் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் 4 பேர் ஷாகித் வாஷெலை சுற்றிவளைத்தனர். இதனால் பதறிப்போன ஷாகித் வாஷெல், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
பின்னர் அவர் தனது கையில் இருந்த இரும்பு குழாயை போலீசாரிடம் காட்டுவதற்காக அவர்களை நோக்கி நீட்டினார். ஆனால் அவர் தங்களை சுடும் நோக்கில் துப்பாக்கியைத் தான் நீட்டுகிறார் என்று எண்ணிய போலீஸ் அதிகாரிகள் ஷாகித் வாஷெலை சரமாரியாக சுட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து 10 முறை அவரை சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அதன் பின்னர் அவர் அருகில் சென்று பார்த்தபோது, அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல, இரும்பு குழாய் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷாகித் வாஷெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கடந்த மாதம் 18-ந்தேதி கலிபோர்னியா மாகாணத்தில் 22 வயதான கருப்பு இனத்தவர் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்து, போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கருப்பு இனத்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு கருப்பு இனத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டது அமெரிக்காவில் வாழும் கருப்பு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.