தென்மராட்சி மீனவர்களுக்கு வலைகள் கிடைப்பதில் தாமதம்!
பயனாளிகளுக்குரிய வலைகள் இதுவரை வழங்கப்படாமல் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று தென்மராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் மீன்பிடி வலைகள் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினருக்கான மீன்பிடி வலைகள் கடந்த மாதம் 9ஆம் திகதி பிரதேச செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அவை அடுத்த வாரம் பயானளிகளுக்கு விநியோகிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஒரு மாதகாலமாகியும் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட 75 பேருக்கான வலைகளே நிலுவையில் உள்ளன.
இது தொடர்பில் சாவகச்சேரி பிரதேச செயலர் தேவரஞ்சனி பாபுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு தொகுதி வலைகளே பிரதேச செயலகத்தில் உள்ளன. ஏனையதொகுதி வலைகள் இன்னும்வர இருக்கின்றன. வடகடல் உற்பத்தி நிறுவனமே வலைகளைத் தயாரித்து வழங்குகின்றது.
அவற்றை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளமையாலேயே அவற்றை வழங்க முடியவில்லை. எனினும் வலைகள் இன்னும் 2 கிழமைகளில் பிரதேச செயலகத்துக்கு வரும். வந்ததும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் வடகடல் உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்குரிய ஒரு தொகுதி பெரிய கண்வலைகளை நாம் தயாரித்து கொடுத்து விட்டோம். கிட்டத்தட்ட 900 சின்னகண்வலைகளே வழங்க வேண்டும். சின்ன கண்வலைகள் தயாரிப்பதற்கு கால தாமதமாகும் என்ற காரணத்தினாலேயே ஒரு தொகுதி வலைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. இரண்டு கிழமைகளில் இவற்றை தயாரித்து சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு அனுப்பவுள்ளோம் என்று வடகடல் உற்பத்தி நிறு வனத்தின் முகாமையாளர் நேசராஜா பிரதீப் தெரிவித்தார்.
எமது நிறுவனத்துக்கு மூலப்பொருள்கள் இப்போது ஏராளமாக கிடைத்துள்ளன. அதனால் எமது உற்பத்தியை கூட்டக் கூடியதாக இருக்கின்றது. அதனைவிட எமக்கு அரச ஒப்பந்தங்களும் ஏராளமாக வருகின்றன. தற்போது தமது நிறுவனத்தில் 65 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை