ஆலய பூசாரிகள் இருவர் விளக்கமறியலில்!

மட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம் குமரரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசாரிகள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார். 

கடந்த சில மாதங்களாக குமாரபுரம், மாமாங்கம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது. கடந்த புதன்கிழமை (04) இரவு குமாரபுரத்தில் வீதியில் வைத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மீது ஒரு குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடினர். இதில் 19 , 49 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பாரிய குற்றப்பிரிவு பெறுப்பதிகாரி ஏ.எம்.என் பண்டார தலைமையிலான பொலிஸ் சாஜன் கே.சி.எம். முஸ்தப்பா உட்பட பொலிசார் இவ் வாள்வெட்டு நடாத்திய சந்தேகத்தின்பேரில் மாமாங்கப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆலய பூசாரிகளை வியாழக்கிழமை கைது செய்தனர். 

அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் கருவறையில் வைக்கப்பட்ட வாளை குறித்த நபர்கள் எடுத்துச் சென்று இருவர் மீது தாக்குல் மேற்கொண்டுவிட்டு திரும்ப அந்த வாள் இருந்த இடத்தில் வைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததையடுத்து அந்த வாளை பொலிசார் மீட்டதுடன், இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இதேவேளை இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக இரு குழுக்களுக்கிடையே 4 வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மோதல்களும் இடம்பெற்று வருவதால் இப்பகுதி பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் வீதிகளில் செல்லமுடியாத ஒரு பயபீதி நிலமை ஏற்பட்டுள்ளது. 

எனவே இச் சம்பங்களுடன் தொடர்புடைய வாள்வெட்டு குழுக்களை கைது செய்யமாறு கோரி அப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.