ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் பதவி சுழற்சி முறையில்!

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவி இரண்டு வருடத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்றதன் பின்னர் பிரதியமைச்சரின் இல்லத்தில் தற்போதைய தவிசாளர் ஐ.ரி.அஸ்மிக்கும், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபருக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

அந்த வகையில் கூட்டாச்சியின் படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தவிசாளர் பதவியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் வழங்கப்படும் என்றும், கட்சிகளுக்கிடையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கான தவிசாளர் பதவி சுழற்சி முறையில் முதல் இரண்டு வருடங்களுக்கு ஐ.ரி.அஸ்மிக்கும், மிகுதி இரண்டு வருடம் ஏ.எம்.நௌபருக்கும் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தில் இருவரும் கைச்சாத்திட்டனர். 

இந்நிகழ்வில் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி ஏ.எம்.றாசீக், ஊடகவியலாளர் எம்.ரி.எம்.பாரீஸ் மற்றும் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.