புலிகள் கணக்கெடுப்பு பணி திடீர் நிறுத்தம்!
விருதுநகர் உட்பட 5 மாவட்ட வனப்பகுதிகளில் நடந்த புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கிய அரை நாளிலேயே திடீரென நிறுத்தப்பட்டது.தென்மாவட்ட வனப்பகுதிகளில் புலிகளை கணக்கெடுக்க, விருதுநகர் மாவட்டம். திருவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மையத்தில், வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்றைய தினமே திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பீட்களில், வனத்துறையினர் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
வரும் 15ம் தேதி வரை 7 நாட்கள் கணக்கெடுப்பு பணிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று மதியமே திடீரென கணக்கெடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் வன விரிவாக்க மையத்திற்கு திரும்பி வந்தனர்.இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் புலிகள் காப்பகம் இல்லாத அனைத்து வனப்பகுதிகளிலும், ஒரே நேரத்தில் கணக்கெடுக்க, புலிகள் காப்பக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் விருதுநகர் உட்பட 5 மாவட்டங்களில் கணக்கெடுப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. மறுதேதி அறிவித்த பின், ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கும்,’’ என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை