குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒத்துழையுங்கள்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த பொதுமக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு மானிப்பாய் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பில் தெரிவித்ததாவது:
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை,சுதுமலை, மானிப்பாய் நகரப்பகுதி போன்ற இடங்களில் அண்மைக்காலமாக சமூகவிரோதச் செயல்கள் தலை தூக்கியுள்ளன.
பல கொள்ளைச் சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.இவற்றைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மக்கள் தரும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும். இந்த விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ அல்லது குற்றச் செயல்களைக் கண் டாலோ உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை எவரும் கைது செய்யவில்லை என்றும் குற்றத்தை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்களால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை