சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்!

சமரசப் பேச்சுவார்த்தை ஊடாக திருமலை சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை, சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்தக் கடிதத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
திருகோணமலை, சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ஹபாயா விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் −முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின பரஸ்பர புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.
யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் –முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.
திருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும், அந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாசார,பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும். அதுமட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒருபோதுமே துணைபோனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக்கடிதத்தை எழுதுகின்றேன். இந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத் தீர்வொன்றைக்காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற் சில பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீயசக்திகள் ஈடுபட்டன. அதேபோன்று மீண்டும் தமிழ் –முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீய சக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.
எனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்துவாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.
தற்போது மீள உருவாகிவரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமைந்துவிடக்கூடாது.
எனவே, திருமலைமாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும்அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு அன்பாய் வேண்டுகின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.