உண்ணா விரதத்தை கைவிட்டார் அரசியல் கைதி!
அநுராதபுரம் சிறைச்சா லைக்குள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உணவு ஒறுப்பு போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார். தனிச்சிறையிலிருந்து பொதுச் சிறைக்கு மாற்றுவதாக வாக்குறுதியளித்ததையடுத்து உணவு ஒறுப்புக் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இராபல்லவன் தபோரூபன்(வயது 36) என்பவர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாண சிறைச்சா லைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அவர் சிறையிலி ருந்து தப்பிக்க முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டி 2013 ஆம் ஆண்டு அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து சிறைச்சாலையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னைத் தனியே வைத்திருக்காது ஏனைய கைதிகளுடன் இருக்கவிடுமாறு பல தரப்புக்களிடம் கோரியிருந்தார். பதில் கிடைக்கவில்லை. சக கைதிகளுடன் இருக்க விடுமாறுகோரி சில தினங்களுக்கு முன்னர் தொடக்கம் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருக்கும்போது தப்பிக்க முயற்சிக்கவில்லை என்று யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் அநுராதபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைக் கொழும்பிலுள்ள தலைமை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அவரது கோரிக்கை மிக விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்ற சிறைச்சாலை அதிகாரிகளின் உறுதிமொழிக்கு அமைய உணவு உறுப்பு கைவிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை