ராமர் பெயரை சொல்லி பா.ஜ.க. மக்களை ஏமாற்றி விட்டது!


மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ராமர் கோவில் கட்டித் தருவதாக ஆட்சியைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றிவிட்டது என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்ப்பில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா கலத்துக்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- மத்தியில் ஆளும் மோடி அரசும், உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் யோகி அரசும் ராமர் கோவில் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியால் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இப்போது அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக கதை சொல்கிறார்கள். ராமர் பெயரை சொல்லி பா.ஜ.க. மக்களை ஏமாற்றி விட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. அரசு ஒரு முன்னேற்றமும் புரியவில்லை. 20 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நான் மோடியிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் தற்போது இந்த கேள்விகளை எழுப்புகிறேன் இவ்வாறு பிரவின் தொகாடியா பேசினார். சிவசேனா கட்சி ஏற்கனவே பா.ஜ.க.விற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தாலும் தற்போது பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.