பெண்கள் வன்கொடுமையில் சிக்கும் எஸ்.வி. சேகர்..!

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் சிக்க வைக்கும் விதமாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆடியோவில் ஆளுநர், கல்வித்துறை உயரதிகாரிகள் குறித்தும் பேசப்பட்டதால் ஆளுநர் இது குறித்து பத்திரிக்கையாள்களிடம் விளக்கம் அளித்தார்.



அந்த பிரஸ் மீட்டின்போதுபெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம்  தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார்.



 தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளை அடுத்து  ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் மற்றும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கி விட்டார்.  ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.



இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட  கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என எஸ்.வி.சேகர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.



இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.