பன்னாடுகளின் ஆதரவுடன் எமது விடுதலைக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது!
எமது இனம் இழந்த சுதந்திரத் தையும், உரிமைகளையும் மீளப் பன்னாடுகளின் ஆதரவுடன் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதால் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ. சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். தந்தை செல்வாவின் 121 ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அவர்களுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு பொறிமுறைக்குள் இலங்கை அரசு சிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தென்னிலங்கையில் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது. நாம் பன்னாடுகளின் ஆதரவுடன் எமது விடுதலைக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
அதற்காக நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. அதற்காக அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களை ஒன்றிணையக் கோருகின்றேன். தமிழ்,முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் விடிவுக்காக நாம் முயற்சிக்க வேண்டும்.
அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். பேரினவாதச் சக்திகளிடம் இருந்து எம்மை மீட்க நாம் இழந்த சுதந்திரத்தை மீளப் பெற முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
எமது இனத்தின் விடுதலைக்காகவும், இழந்த சுதந்திரத்தை பன்னாடுகளின் ஆதரவுடன் மீண்டும் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. நாம் அனைவரும் இப்போது ஒன்றுபட வேண்டும் என்று தந்தை செல்வாவின் நினைவிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கின்றேன். என்றார்.
கருத்துகள் இல்லை