இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இறால் இனத்தால் பாதிப்பில்லை!

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் வெனமி (vannamei prawns) எனப்படும் இறால் இனம், எயிட்ஸ் உள்ளிட்ட பத்துவித பயங்கரமான நோய்களை பரப்புவதாக பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது முற்றிலும் பொய் என ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் மக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லையென கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, மக்களுக்கோ நீர்நிலைகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எவ்வகை உயிரினத்தையும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோமென்றும் அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.
நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வெனமி இறால் இனத்தால் பல நோய்கள் பரப்பப்படுவதாக மக்களிடையே எழுப்பப்பட்டிருக்கும் புரளி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
'வெனமி' யானது அதிக விளைச்சல் மற்றும் இலாபம் தரகூடியதொரு இறால் இனமாகும். இது இந்தியா, சீனா,வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இலங்கைக்கு அதிகம் இலாபம் கிட்டும் என்ற ஒரே நோக்கிற்காகவே இந்த இறால் இனத்தை அமெரிக்காவின் ஹவாய் பகுதியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். இதனை நாட்டுக்கு இறக்குமதி செய்து தருமாறு கோரியவர்களே இன்று இதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.