விரைவாக மீளக்குடியேற உதவி!
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் விரைவாக மீளக் குடியேறும் வகையில் வலி. வடக்கு பிரதேச சபையானது மக்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது என்று வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார்.
வலி. வடக்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த சித்திரை 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் பொதுமக்களது காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு மீள கையளிக்கப்பட்டிருந்தன. இவற்றில் மக்கள் மீள குடியேற்றத்தை விரைவாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள கிணறுகளானது பாழடைந்து தூர்ந்து போயுள்ள நிலையில் அவற்றை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவை தவிர மக்கள் காணிகளுக்கு செல்வதற்கு இடையூறாக பாதைகளில் பற்றைகளும் காட்டு மரங்களும் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. எனவே அம் மரங்களை இயந்திரங்களைக் கொண்டு வெட்டி பாதைகளை அடையாளப்படுத்தும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கட்டுவன் –மயிலிட்டி பிரதான வீதியானது சேதமடைந்துள்ள நிலையில் அவ் வீதியினையும் விரைவாக சீர்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை