4085 வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது!
நான்காயிரத்து எண்பத்தைந்து அபாயகரமான வெடிபொருட்கள் சார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் நான்கு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நானூற்று ஜம்பது சதுரமீற்றர் பரப்பளவில் (468,450Sqm) இருந்து நான்காயிரத்து எண்பத்து ஜந்து (4085) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
தற்போது பணிகளை முகமாலை கிளாலி பகுதிகளில் யுத்தத்தின் போது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் புதைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் சார்ப் மனித நேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் 2020-ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இந்நிறுவனத்தில் மொத்தம் 112 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 10 பெண் பணியாளர்கள் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை