கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்சவா? பசில் ராஜபக்சவா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சித் தரப்பின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ச நடுநிலையாக செயற்படக் கூடிய நபர், இதனால் அவர் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டார். இதன் காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அங்கம் வகிக்கும் முற்போக்கு அணியின் சார்பில் சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கூட்டு எதிர்கட்சி மூன்று அணிகளாக பிளவுப்பட்டு செயற்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட சிங்கள தேசியவாத சக்திகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , பசில் ராஜபக்ச உள்ளிட்ட அணியினர், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவும் ஆதரவு வழங்க இந்த அணியினர் முன்வந்துள்ளனர். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால், நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால் பொதுத் தேர்தலில் மூலம் பிரதமராக பதவிக்கு வரலாம் என மகிந்த ராஜபக்ச எண்ணுவதாக கூறப்படுகிறது. அதேவேளை
வாசுதேவ நாணயக்கார உட்பட இடதுசாரிகளும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதன் காரணமாகவே கோத்தபாயவுக்கு பதிலாக சமல் ராஜபக்சவை கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள இடதுசாரிகள் பரிந்துரை்த்துள்ளதாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.