ரக்பி வீரர்கள் உயிரிழப்பு; ஆட்டோ சாரதிகளிடம் விசாரணை!

இரண்டு ரக்பி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்
முச்சக்கரவண்டி சாரதிகள் பலரிடம், கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இரு ரக்பி வீரர்களுக்கும் போதைப் பொருளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதியை அடையாளம் கண்டு கைது செய்யும் நோக்கில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கழக மட்ட ரக்பி வீரர்களான தோமஸ் ஹவார்ட் (26) மற்றும் தோமஸ் பெடி (27) ஆகியோர்  கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

முச்சக்கர வண்டி சாரதி வழங்கிய போதைப் பொருளை பயன்படுத்தியதாக, தோமஸ் பெடி, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சந்தர்ப்பத்தில் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டி சாரதியை தேடி வருகின்றனர்.

பல முச்சக்கர வண்டி சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் சந்தேகத்துக்குரிய குறித்த சாரதியை இதுவரை கண்டறியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பாவனையே குறித்த இரு ரக்பி வீரர்களும் உயிரிழக்க காரணமாக அமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கும் பொலிஸார், இருவரது உடல்களிலும் வேறு காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.