யாழில் முகநூலால் ஒன்றிணைந்த இளைஞர்கள் பாரிய திருட்டு முயற்சி முறியடிப்பு!

யாழ்.சங்கானைப் பகுதியில் பாரிய திருட்டு முயற்சியை முகநூலால் ஒன்றிணைந்த இளைஞர்கள் முறியடித்துள்ளனர். குறித்த இளைஞர்களுக்குத் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கானை அராலி வீதி மற்றும் குளத்தடி ஆகிய வீதிகளில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின் மீது இரவோடிரவாகக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அலுமியப் பொருட்கள் செய்யும் வர்த்தக நிலையமொன்றின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. குறித்த செயற்பாடுகளுக்குத் திருட்டுக் கும்பலொன்றே பின்னணியில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் உலாவுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வேகமாகச் செயற்பட்ட குறித்த இளைஞர்கள் முகநூலிலுள்ள குழு அரட்டையில்(குறூப் சட்) தகவல்கள் பரிமாறி உடனடியாக ஓரிடத்தில் ஒன்றுகூடியதையடுத்துத் திருடர்கள் தமது திருட்டு முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.