முப்படைகளின் அணிவகுப்புடன் மைத்திரி நாளை நாடாளுமன்றம் செல்லவுள்ளார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த மாதம் முடக்கப்பட்ட 8 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் மீண்டும் நாளை 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நாளை பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்து அரசின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்துவார்.
புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது அரச தலைவருக்கு 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை நாடாளுமன்ற வீதியில் அளிக்கப்பட்டு, சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் இடம்பெறும்.
நாடாளுமன்றத்தில் பார்வையாளர் கலரி மூடப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் விசேட பிரமுகர்கள் மாத்திரம் இந்த ஆரம்ப நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆரம்ப தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து அரசின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்துவார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை