காரைதீவு ஆலயமருகே மாட்டெலும்புகழிவுகள் வீச்சு!

எல்லையில் பதட்டம்: பொலிசார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைவு:
இன விரிசலை உருவாக்க முயற்சி என்கிறார் தவிசாளர் ஜெயசிறில்!
காரைதீவு நிருபர் சகா
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயமருகே  (04.05.2018) வெள்ளிக்கிழமை மாட்டெலும்புகளுடன் கூடிய கழிவுகள் வீசப்பட்டுள்ளன.
இவ்வாலயம் காரைதீவு நிந்தவூர் எல்லைப்பகுதியில் இந்துமயானத்திற்கருகே அமைந்துள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட விசமிகளின் செயலாக இது இருக்கலாமென நம்பப்படுகின்றது.
இன்று காலை பக்தர்கள் ஆலயத்திற்கு செல்லமுடியாதவாறு இந்த கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. இதனால் பலர் ஆலயத்திற்குச் செல்லாமல் வீடு திரும்பினர். பலர் ஆத்திரமடைந்து காணப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. மக்கள் ஒன்றுதிரண்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து அம்பாறைக்குச்சென்றிருந்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் செயலாளர் அ.சுந்தரகுமார் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபன் ஆகியோர் உடனடியாகத்திரும்பி ஸ்தலத்திற்கு வந்துசேர்ந்தனர்;. அங்கு ஒருவித பதட்டம் நிலவியது.
தவிசாளர் ஜெயசிறில் சம்மாந்துறைப் பொலிசாருக்கு உடனடியாக முறையிட்டதைத் தொடர்ந்து பொலிசாரும் ஸ்தலத்திற்கு விரைந்து வந்தனர். எனினும் வீசியவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
தவிசாளர் ஜெயசிறில் அந்தஇடத்திலிருந்து கருத்துரைக்கையில்;
மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்துவருகின்ற தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை உண்டுபண்ணும் நோக்கத்திலே இச்செயல் இடம்பெற்றிருக்கிறது.
இந்த இழிசெயலைச்செய்தவர்களின் நோக்கத்திற்கு பொதுமக்கள் ஒருபோதும் பலிக்கடாவாகிவிடக்கூடாது.
வெள்ளிக்கிழமையன்று ஆலயத்திற்கு மக்கள் கூடுவார்கள் என்று தெரிந்திருந்தும் இத்தகைய இழிசெயலைச்செய்துள்ளனர்.
சூழல் சுற்றாடல் அதிகார சபையினரிடம் இது போன்ற செயற்பாடுகள் தொடர்பாக பல தடவைகள் எடுத்துக்கூறியும் நிகழ்ச்சி நிரலுக்கமைவான செயற்பாட்டை மாத்திரமே செய்கிறார்கள். இத்தகைய ஈனச்செயலைக் கண்டுகொள்கிறார்களில்லை. காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியிலும் இவ்வாறு கழிவுகள்கடந்த காலங்களில் வீசப்பட்டிருந்தன.
காரைதீவில் மாடு அறுப்பது இல்லை. ஆகவே இத்தகைய கழிவுகள் வரச்சந்தர்ப்பமில்லை. இந்தக்கழிவுகள் வேறிடத்திலிருந்து வேண்டுமென்றே கொண்டுவந்து வீசப்பட்டிருக்கின்றன என்பதை ஊகிக்கக்கூடியதாயிருக்கின்றது.
இந்த ஈனச்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
எந்த மதமானாலும் ஏனைய மத ஸ்தலங்களை மதிக்கவேண்டும். இவ்வாறன ஈனச்செயல்கள் மனித மனங்களை விரக்தியடையவைக்கும். மாறாக மதசுதந்திரத்திற்கும் தடையாகவுமுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களை பொலிசார் உடனடியாகக்கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்தி நீதிவழங்குவதோடு இனமுறுகலைத்தவிர்க்கவும் வகை செய்யவேண்டும். என்றார்.
பொலிசார் கூறுகையில்:
இன்றைய சம்பவம் சமகாலசூழலுக்கு ஏற்றதல்ல. ஆனால் இந்தச்செயலைச்செய்தவர்களை உடனடியாக கைதுசெய்யமுடியாதுள்ளது. இனிவருங்காலங்களில் இப்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு இத்தகைய குற்றச்செயலைச் செய்தவர்களைக்கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தவும் தயங்கமாட்டோம்.மக்கள் அதுவரை பொறுமைகாக்கவேண்;டும். என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.