இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்குகள்!

மேஜர் ஜெனரல், ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை குண்டுத்
தாக்குதல் மூலம் கொலை செய்து, 60 பேருக்கு காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 இந்த வழக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 அத்துடன், வழக்குத் தொடுநர் மற்றும் பிரதிவாதி ஆகிய இரு தரப்பினரதும், விளக்கங்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்வைக்குமாறும் பிரதான நீதவான் ஹர்ஷண கெக்குணவல தெரிவித்துள்ளார்.

 குறித்த வழக்கு அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில், நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

 எனினும், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதி மன்றில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

 இதன் காரணமாக, குறித்த வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்துக்க மாற்றப்பட்டது.  குறித்த சம்பவத்தின் பிரதான பிரதிவாதியான உமார் ஹபிதாபி தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 அவர்களை கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய இன்று வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 கடந்த 2012 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 9.00 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 7.00 மணிவரையிலான கால பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தனர்.

 உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கைதிகளின் தலைப்பகுதி மற்றும் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கி காயங்கள் காணப்பட்டமையினால் திட்டமிடப்பட்ட செயல் என விசாரணைகளின் வாயிலாக நீதிமன்றம் கருதியது.

 இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வெலிக்டை சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டு வந்த எமில்ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் காவல் துறை பரிசோதகரான ரங்கஜீவ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

 துப்பாக்கி பிரயோகத்தின் போது கைதிகளை அடையாளம் காண்பித்து உதவியதாக லமாஹவா மீதும் படுகொலைக்கு உதவியதாக ரங்கஜீவ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 குறித்த குற்றங்களை இழைத்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், விளக்கமறியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை 2 கோடி ரூபா கையூட்டல் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச - மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 அவர்களை கடந்த 9 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

 கத்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பங்கினை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றுவதற்காக, குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாய்களை அவர்கள் கையூட்டலாக கோரியுள்ளனர்.

 அந்த தொகையின் முற்பணத்தை பெற்றுக் கொண்ட வேளையில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து கடந்த 3 ஆம் திகதி மாலை அவர்கள் கைது செய்யப்பட்டு,  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
             

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.