மாணவியின் சீருடை, கழுத்துப்பட்டி மீட்கப்பட்டமை குறித்து அதிபரிடம் விசாரணை!

யாழ்ப்பாணம், புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்துப்பட்டி என்பன மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 

“யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துப்பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று (31) காலை மீட்கப்பட்டன. 

அவை தொடர்பில் இடைக்காடு மகா வித்தியாலய அதிபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனையடுத்து பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதிபட அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும், அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார். 

அந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டார். 

இந்த நிலையில் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மாணவி ஒருவரின் பாடசாலைச் சீருடைப் பொதியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.