தமிழகத்தை சீரழித்த எடப்பாடி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது குடும்பத்தினருடன் சேலத்திலிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றார். அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆந்திர போலீஸார் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். இன்று காலையில் ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

நேற்று இரவு,  திருமலை மாட வீதியில் உள்ள வராகசாமி கோயிலில் தரிசனம் முடித்த எடப்பாடி பழனிசாமி, அருகில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு சென்றார். அங்கு குடும்பத்துடன் தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அர்ச்சகர் தோற்றத்தில் இருந்த ஒரு பக்தர், திடீரென சாமி வந்துவிட்டது போன்று ஆவசமாக கூச்சலிட்டார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சீரழித்து விட்டதாகவும், அவர் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். இதனை அடுத்து அந்த பக்தரை போலீசார் வெளியேற்றினர்.

இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமியும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரால் வெளியேற்றப்பட்ட பக்தரிடம் நடத்திய விசாரணையில் தனது பெயர் ஸ்ரீராமுலு என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதன் பிறகு, ஸ்ரீராமலுவை போலீசார் விடுவித்தனர். ஆனால், ஸ்ரீராமுலுவின் செயலை, தமிழக பக்தர்கள் பாராட்டினர்.

எடப்பாடி பழனிசாமியை, சாமியாக சித்தரித்து தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட விளம்பர படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அந்த விளம்பர படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் நான்தான் சாமி என்றும், எடப்பாடி தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று தமிழக பக்தர் ஒருவர் திருப்பதியில் பேசியது அதிர்ச்சியை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.