முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சுயாதீனக் குழு!
தமிழர் இன அழிப்பின் அடையாளமான முள்ளி வாய்க்காலின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் அடுத்த ஆண்டு பேரெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும். வடக்கு மாகாண அரசு இல்லாவிடினும் நினைவேந்தலை தொடர்ந்து நடத்துவதற்காக பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சுயாதீனக் குழு நிறுவப்படும்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து கடைப்பிடிக்க ஆர்வம் உள்ள பொது அமைப்புக்களுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் அவரது அலுவலகத்தில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையே ஒருங்கிணைத்து வருகின்றது. இந்த ஆண்டும் நாமே ஒருங்கிணைத்து நடாத்தத் தீர்மானித்து எம்முடன் இணைந்து செயற்பட ஆர்வம் உள்ள பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அந்த அழைப்பை ஏற்று வந்த பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடினோம். அதில் பலரும் பலவாறான கருத்துகளை முன்வைத்தனர்.
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் நடப்பாண்டுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் பத்தாண்டு நிறைவு அடுத்த ஆண்டாகும். அந்த நினைவு நாளை நாம் உணர்வுபூர்வமாக பேரெழுச்சியுடன் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளோம். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து நடாத்த அனைத்துச் சமூக மட்ட அமைப்புக்களையும் இணைத்துக் குழுவை அமைக்கவுள்ளோம் – என்றார்.
கருத்துகள் இல்லை