இலங்கை உள்ளுர்(SLC)நடாத்தும் கிரிக்கெட்டில் காலி அணி வெற்றி!

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று நடைபெற்றன.

இதில் கண்டி அணியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியைப் பெற்ற தம்புள்ளை போனஸ் புள்ளியுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதோடு காலி அணியிடம் தொடரில் முதல் தோல்வியை சந்தித்த கொழும்பு அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கொழும்பு  எதிர் காலி


சதீர சமரவிக்ரம மற்றும் ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணியுடனான போட்டியில் உபுல் தரங்க தலைமையிலான காலி அணி 147 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு அணிக்கு அதன் தலைவரான தினேஷ் சந்திமால் களமிறங்கிய நிலையிலேயே அந்த அணி தொடரில் தனது முதல் தோல்வியை சந்தித்தது.

முதலிரு போட்டிகளிலும் அந்த அணிக்கு திசர பெரேரா தலைவராக செயற்பட்டார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த உபுல் தரங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சமரவிக்ரம மற்றும் ரம்புக்வெல்ல எதிரணியை திக்குமுக்காடச் செய்தனர்.

இருவரும் அதிரடியாக பந்துகளை விளாசி ஓட்டங்களை வேகமாக அதிகரித்தனர்.

இதன் மூலம் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை உள்ளூர் போட்டிகளில் அதிரடி துடுப்பாட்ட வீரராக பெயர் பெற்ற ரம்புக்வெல்ல 6 பௌண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 79 பந்துகளில் 87 ஓட்டங்களை குவித்தார்.

மறுபுறம் இலங்கை A நிலை போட்டிகளில் தனது 2ஆவது சதத்தைப் பெற்ற 22 வயதுடைய சதீர சமரவிக்ரம 118 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 130 ஓட்டங்களை விளாசினார்.

காலி அணிக்காக கடைசி நேரத்தில் சதுரங்க டி சில்வா வேகமாக அரைச்சதம் ஒன்றை எடுத்தார். 35 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 57 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் காலி அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 347 ஓட்டங்களை எடுத்தது. எதிரணியை மட்டுப்படுத்த தடுமாறிய கொழும்பு அணி தனது எட்டு வீரர்களை பந்துவீச பயன்படுத்தியது.

எனினும் சிறப்பு சுழல் பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இருவருமே முறையே 3, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணி 2 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தபோதும் அந்த அணிக்காக சோபித்து வரும் வீரர்களான ஷெஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு திரிமான்ன இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு நம்பிக்கை ஏற்படுத்தினர்.

இதில் கடந்த போட்டியில் அபார சதம் பெற்ற ஜயசூரிய 70 ஓட்டங்களையும் அதற்கு முந்திய போட்டியில் சதம் குவித்த திரிமான்ன 48 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தபின் கொழும்பு அணி நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்தது.

கொழும்பு அணியின் மத்திய வரிசை வீரர்கள் நின்றுபிடித்து ஆடவில்லை. அணித்தலைவர் சந்திமால் ஒரு ஓட்டத்தோடு வெளியேறியதோடு திசர பெரேராவால் 8 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதனால் கொழும்பு அணி 42.4 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

காலி அணி சார்பில் சிறப்பு சுழல் பந்துவீச்சாளராக உள்ள மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த வெற்றியுடன் காலி அணி ஒரு போனஸ் புள்ளியுடன் மொத்தம் 9 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

8 புள்ளிகளுடன் கொழும்பு அணி இரண்டாவது இடத்திற்கு சரிந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.