மலேசியாவில் 19,000 பேர் கைது!

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி, முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலர் இதில் கைதாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் பலர் மசாஜ் மையங்களில், விபச்சார விடுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், “வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் விசா பெற்று, அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி முறையான விசாவில் வேலை செய்தாலும் முந்தைய நிறுவனம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் குடிவரவுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என எச்சரித்திருக்கிறார் இயக்குனர் ஜெனரல் முஸ்தபர் அலி.

கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நடவடிக்கையின் ஓர் அங்கமாக கடந்த மார்ச் மாதம் 4000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்.

இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர்.

இறுதியில் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.