வீட்டில் தயாரித்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயம்!

தம்பியை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவதற்காக வீட்டில் தயாரித்த வெடிகுண்டு வெடித்ததில் அண்ணன் உள்பட 2 பேர்

படுகாயமடைந்தனர். மேலும் வெடி அதிர்வில் வீடும் இடிந்து சேதமடைந்தது. மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (32). இவரது வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, நரசிம்மன் அவரது உறவினர் முனியசாமி (35) ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். கீரைத்துரை போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெடிகுண்டு வெடித்த அதிர்வில் வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தை காவல் துறை துணை கமிஷனர் சசிமோகன் நேரில் பார்வையிட்டார்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் உயர்ரக வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், ‘‘கீரைத்துறை பகுதியில் முன்விரோதம் காரணமாக குருசாமி, ராஜபாண்டி தரப்பினரிடையே பல கொலைகள் நடந்துள்ளன. கடந்த 4ம் தேதி குருசாமியின் உறவினரான வேலுகுமாரை, ராஜபாண்டியனின் தரப்பை சேர்ந்த 7 பேர் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இன்று வெடிகுண்டு காயம் ஏற்பட்ட 2 பேரும் குருசாமியின் உறவினர்கள். இதில் முனியசாமி வேலுகுமாரின் அண்ணன். பழிக்குப்பழி வாங்க வெடிகுண்டு தயாரித்தபோது அது வெடித்து சிதறி இருக்கலாம் என கருகிறோம். 70 சதவீதம் காயமடைந்துள்ள நரசிம்மன், முனியசாமியிடம் விசாரித்ததால்தான் முழு விபரம் தெரியவரும்,’’ என்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.