ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்துச் செய் நடவடிக்கை!

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சமுர்த்தி வங்கி “ஹரசர’ கடன் வழங்கும் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நடவடிக்கை மூலம் ஏற்படும் வெற்றிடம் சமுர்த்தி வங்கிகளால் நிரப்பப்படும். சமுர்த்தி வங்கி குறித்த சுயாதீன கணக்காய்வு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. சமுர்த்தி வங்கியைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சமுர்த்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலும் கூட அதன் நோக்கம் இன்னமும் அடையப்படாமலேயே உள்ளது. எவ்வாறாயினும் தெற்காசியப் பிராந்தியத்தில் மிகக் குறைந்த வறுமை வீதத்தைக் கொண்டிருப்பதில் இலங்கை பெருமையடைகின்றது. கடந்த 2012, இல் 7 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை வீதம் இந்த வருடம் 4.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது இத்தகைய அடைவுகளுக்கும் சமுர்த்தி வேலைத்திட்டம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் உடன்படிக்கைகளுக்கு இணங்கும் வகையில் அரசாங்கம் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ. ஹரிசன், சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் மேற்படி அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.