உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மனி அணி வெளியேற்றம்!

உலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பியனுமான ஜேர்மன் அணி 2018 ஆம் ஆண்டின் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 


உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான ஜேர்மன் அணி, கொரியா குடியரசை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜேர்மனி அணி களமிறங்கியது. 

போட்டி தொடங்கியதில் இருந்தே ஜேர்மன் அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. கொரியா அணியின் கோல் கீப்பர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. 

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங் வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார். 

அதன்பின் ஜேர்மன் அணி கோல் கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜேர்மன் அணியால் கோல் அடிக்க முடியாததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜேர்மன் அணி தொடரைவிட்டு வெளியேறியது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.