எட்டுவழிச் சாலைக்கு நிதி உள்ளது: மாணவர்களுக்கு?

எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க தமிழக
அரசு ஏன் அக்கறை செலுத்தவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நிதியை கல்லூரிகளுக்கு வழங்காமல் இருப்பதன் மூலம் மாணவர்களும், கல்லூரி நிறுவனங்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்று குறிப்பிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாக்டோ ஜியோ அமைப்பு சம்பள உயர்வுக்காக உண்ணாவிரதம், போராட்டம் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. அரசிடம் மனம் இருக்கிறது, பணம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சொல்கிறார். ஆனால் சேலத்தில் இருந்து எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு மட்டும் மத்திய அரசிடம் இருந்து பத்தாயிரம் கோடி நிதியை பெற்று தமிழக அரசு பொதுமக்கள், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கு மட்டும் பணம் இருக்கிறதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"யோகா மற்றும் அயூர்வேதா மருத்துவமனை அமைப்பதற்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்குவதை பார்க்கும் பொழுது, SC/ST மாணவர்களுக்கான கல்வி நிதியினை ஒதுக்குவதற்கு எடப்பாடி.பழனிச்சாமி அரசு ஏன் அக்கறை செலுத்தவில்லை என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது" என்று கூறியுள்ள விஜயகாந்த், "அரசாங்க ஒப்பந்த வேலைகள் எடுத்து பணிகள் முடித்தபிறகும் தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதால் பல திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கியுள்ளது. எனவே தமிழக அரசு நடப்பாண்டிற்கான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்து, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.