ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மேலதிக பணியாளர்களை நீக்கமா?

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் பணியாற்றும் மேலதிக ஊழியர்களை,
சுய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய விமான சேவைகளின் நிதி நிலைமைகள் தொடர்பில் ஆராயும் குழு முன்வைத்த பரிந்துரைத் தொடர்பில் ஆராய்வதற்காக, விமான நிறுவனம் விசேட பணிக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் 2,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதோடு, சுமார் 1,000 ஊழியர்கள் 50 தொடக்கம் 55 வயதுக்குட்பட்டவர்களாக காணப்படுவதாக விமான நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தேசிய விமான சேவை, கடந்த மார்ச் மாதம் வரையில் 107 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது.
இந்நிலையில், விமான நிறுவனம் எதிர்நோக்கியுள்ள நட்டத்தை குறைக்கும் வகையிலான, சீர்திருத்தங்கள் அடங்கிய முன்மொழிவுகளை விரைவில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரயெல்ல, அல்லாவிடின் கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டி வீதமானது விமான நிறுவனத்தின் மொத்த நட்டத்துடன் சேர்க்கப்படும் அபாயம் காணப்படுவதாகம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், நான்கு புதிய 350 NEO-300 ரக விமானங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு ஏற்கனவே அனுப்பப்பட்ட கொள்வனவு உத்தரவுகளை மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலாக எட்டு NEO-320 விமானங்களை வழங்க குறித்த விமான உற்பத்தி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் குறித்த விமானங்கள் 2023ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த நிதியாண்டில் 15 சதவிகிதம் செலவீனங்களை குறைப்பதற்கும் தேசிய விமான சேவைகளின் நிதி நிலைமைகள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.