குடியிருப்பில் தீ விபத்து!

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.


இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்தன. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருள்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை. அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.