பார்ட்டி படத்துக்காக முதன்முறையாக சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து பாடல்!

வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்காக முதன்முறையாக சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.


சென்னை 28 இரண்டாம் பாகம் வெற்றியைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பார்ட்டி'. இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

முதன்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். இதனால் படத்தின் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். காமெடி கேங்ஸ்டர் படமாக பார்ட்டி உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 'ச்சா ச்சா ச்சாரே' எனத் தொடங்கும் இந்தப் பாடல், நாளை (ஜூலை 2) ரிலீசாக இருக்கிறது. தற்போது இந்தப் பாடலுக்கான புரமோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.

இதற்கு முன் சன் ரைஸ் விளம்பரம், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடிகர் சூர்யா பாடியுள்ளார். இதேபோல், நடிகர் கார்த்தியும் பிரியாணி, மகளிர் மட்டும், பருத்தி வீரன் போன்ற படங்களில் பாடியிருக்கிறார். ஆனால், இருவரும் முதன்முறையாக ஒன்று சேர்ந்து பாடுவது பார்ட்டி திரைப்படத்தில்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.