வவுனியாவில் பரிதாபமாக தொழிலாளி பலி!

வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை முதல் வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயரமான இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் பிற்பகல் 2 மணியளவில் எதிர்பாராமல் தவறி கீழே வீழ்ந்து நிலையில் அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சக பணியாளர்கள் இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த சிவா என்று அழைக்கப்படும் 30 வயதுடைய ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் தற்போது வசித்து வருபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்விடயம் குறித்து உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்தவரின் சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.