ரஜினிக்கு எதிராக மீண்டும் மனு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது, ஓசூர்
நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரி இரண்டாவது முறையாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிலம்பரசன் என்பவர் கடந்த ஜூன் 11ஆம் தேதி ஓசூர் நகரக் காவல் நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்தார். காவல் துறையினர் இது தொடர்பாக சி.எஸ்.ஆர். வழங்கினர். ஆனால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாத நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கடந்த ஜூன் 27ஆம் தேதி ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவதூறாகப் பேசியதாகவும், நியாயத்திற்குப் போராடியவர்களை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையின் மேலதிகாரிகளை அணுக அறிவுறுத்தினார்.
மேல் அதிகாரிகளை அணுகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என நேற்று (ஜூலை 9) மீண்டும் ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 2வது முறையாக சிலம்பரசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணை 11ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.