மக்களுக்கு கிடைக்காமல் பணம் வீண் விரயம், கேள்விக்குள்ளாவாரா?

வடக்கு மாகாண சுற்றுலாத் துறையின் அலுவலகத்தில் 11பேர் பணியாற்றும்  நிலையில் சுற்றுலாத் துறை சார்ந்த ஆய்விற்காக வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சிற்கு உட்பட்ட 40 பேர் பயணித்துள்ளனர்.


சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் ஏனைய மாகாணங்கள் முன்னெடுக்கும் பணி தொடர்பில் ஆராயும் விஜயம் என்னும் பெயரில் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்  ஊழியர்கள் உட்பட 40 பேர் வடக்கில் இருந்து அரச செலவில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா அதிகார சபை அண்மையில் உருவாக்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண சுற்றுலா அமைச்சுடன் தொடர்புடைய அலுவலர்கள் குறித்த பணி தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் தெற்கிற்கு ஓர் சுற்றுப் பயணத்திற்கு திட்டமிட்டனர்.

இவ்வாறு திட்டமிடப்பட்ட நிலையில் குறித்த அமைச்சு முதலமைச்சரின் கீழ் வருவதனால் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ளவர்கள் குறித்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

அந்த வகையில் சுமார் 5 தொடக்கம் 10 பேர் வரையில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக 40 பேர் வடக்கு மாகாண நிதிச் செலவில் குறித்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சுற்றுப் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் திரும்பவுள்ளதாக கூறப்படுவதோடு இதற்கான செலவுகள் உள்ளிட்ட எவற்றிற்குமே  அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை எனத்

தெரிவிக்கப்படுபவை தொடர்பில் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவரும் குறித்த பயணத்தில் பஙகுகொண்டவர்களில் ஒருவருமான  பேராசிரியர் தேவராயாவை தொடர்புகொண்டு கேட்டபோது ,

மத்திய மாகாணத்தின் அழைப்பின் பெயரில் எமது மாகாண சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளக்கூடிய வழி முறைகள் அதன் மூலம் எமக்கு இலாபம் தேடும் வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக ஒருங்கு செய்யப்பட்ட குறித்த களப் பயணம் மிகவும் பயன் உள்ளதாக அமைத்தது.

இருப்பினும் எமது அலுவலகத்தில் 11பேர் மட்டும் உள்ளபோதும் அதிகமானோர் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.