மாவீரனின் மனைவி நான் என்னிடம் பாலியல் லஞ்சம் கேட்காதீர்கள்.!!

அறைக்கதவை உள்பக்கமாக தாளிட்டுவிட்டு சுவரோடு சாய்ந்து நின்றேன்,என் உடல் எல்லாம் வியர்வையில் நனைந்துபோய் இருந்தது,நிலத்தில் கால்களை வைய்க்கவே முடியாமல் இருந்தது.மொத்தத்தில் பிரமைபிடித்தவளிற்குரிய நிலையில் இருந்தேன், என் இரண்டாவது மகனிற்கு நான் எப்படி இந்த நிலையை விளங்கப்படுத்தபோகிறேன்,

அம்மா அந்தமாமா தானே சொக்லேற் கொண்டுவந்து தாறன் எண்டவர்.ஏனம்மா அந்தமாமா உங்களைக்க கட்டிப்பிடிச்சவர்,ஏனம்மா அந்தமாமாவை தள்ளிவிட்டீங்க..,?அவர்கூடாதவரா இருந்தால் அண்ணாவும் நானும்போய் அடிச்சுப்போட்டுவரட்டுமாம்மா என்றகேள்விகளை அடுக்கியவாறு இருந்தான் என்இளைய மகன்,

நான் என்ன செய்வன் கடவுளே,என்ர பிஞ்சுபாலன்ர மனசில இந்தசம்பவம் பதிஞ்சு போகப்போகுது,கட்டாயம் காரணம் கேட்பானே நான் என்ன செய்வேன் கடவுளே எனக்கு நல்ல தெளிவைத்தரவேண்டும் என்று எண்ணுவதற்குள் என் மகன் அம்மா கதவை திறவுங்கம்மா கதவைத்திறவுங்கம்மா என்று கத்துவது கேட்கிறது, கீழ்த்தரமான எண்ணம்கொண்ட ஒரு பச்சோந்தியானவனை பற்றி எப்படி கூறுவேன் கடவுளே.எத்துன்பம் வந்தாலும் நமக்குத்தானே வருகுது,வேறொரு சூழலாக இருந்திருந்தால் அவனிற்கு என்நிலையை நன்றாக புரியவைய்த்திருப்பேன்.என்னசெய்வது இந்த சமூகத்தில் நல்லதிற்கு காலமில்லை,ஒரு பெண் தனித்திருந்தால் அவளை வாயில்வந்தவாறு கதைப்பார்கள்.அதனால் நான் அவதானமாக இருந்தும் இன்று இப்படி நடந்திட்டுதே. நான் என்ன செய்வேன் கடவுளே.என் பழைய நினைவுகளோடு ஒன்றித்துப்போகிறேன்,

எனது கணவன் மதியரசன் இன்று ஓர் மாவீரன்,நான் பொதுப்பெண்ணாகவே அதாவது போராட்டத்தோடு தொடர்பற்ற ஒரு பெண்ணாகவே இருந்தேன்.எனது மாமாவின் மகன் ஓர் போராளியாக இருந்தபோது விடுமுறை நாட்களில் அவனுடன் வருபவர்தான் மதிநிலவன்.அவரிற்கு என்னைப்பிடித்தப்போக விரும்பம்கேட்டு போராட்டமுறைப்படி திருமணம்செய்து மனைவியாக்கிக்கொண்டார்.

என் குடும்பத்தில் அம்மா எப்போதும் கறாராக இருந்தபடியால் என்வீட்டினருக்கு நான்போராளியை திருமணம் செய்வது விருப்பம் இல்லாத திருமணமாகவே நடந்துமுடிந்தது,

ஆனால் எனக்கு என் வாழ்க்கை மகிழ்வாகவே கழிந்தது,போராளியை திருமணம் செய்தால் விதவையாகத்தான் இருக்கணும் என்று அம்மா சொன்னது இன்றுஎன் மனதைத்தொட்டுச்சென்றது.ஏன் எனது மதியரசன் இல்லாவிட்டாலும் இரண்டு புலிக்குட்டிகள் இருக்கு எனக்கு அதுபோதும் எனக்கு,

இன்று நடந்த சம்பவத்திற்கு நான்கூறப்போகும் கருத்துத்தான்என் மகனின் எதிர்காலமே தங்கியுள்ளது,என் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்,எமது இல்லறவாழ்க்கையின் மகிழ்வில் கிடைத்த முத்துக்கள்தான் என் இரு செல்வங்களும் மூத்தவன் அகவீரன்.இளையவன் கருமுகிலன், இப்பெயரை என் கணவன் வைப்பதற்குக்காரணம்கூட தன் நண்பர்களாக இருந்து போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெயர்களே,மூத்தவனிற்கு 15 வயதும் இளையவனிற்கு 12 வயதும் கடந்திருந்தது,

திருமணம் முடிந்தபடியால் எனது கணவன் பெரிதாக களமுனை செல்வதில்லை,ஏதும் களமுனைஅலுவல் என்றால் மட்டுமே போய்வருவார்,அப்படிபோய்வரும்போதுதான் இராணுவ செல்தாக்குதலில்,2008 ஆம் ஆண்டு எனது கணவன் களமுனையில் லெப்கேணல் மதியரசனாக வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்,பலநூறு போராளிகளின் ஓர்பிடி மண்ணோடு கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டார்.

போராளியை திருமணம் செய்தபடியால்தானோ என்னவோ நான் எதற்கும் கலங்கிநின்றதில்லை,சரணடைந்து முகாம்வாழ்வு முடிந்து மீள்குடியேற்றமாகி வீட்டுத்திட்டம் தந்து கடன்பட்டு கிழமைலோன் எடுத்தே இந்த வீட்டுவேலையை முடித்தேன்,

இரு பிள்ளைகளையும் இன்றைய சூழலில் வளர்ப்பதென்பது சவால் நிறைந்தவையாக உள்ளது,நாங்கள் சாப்பிட்டமோ இல்லையோ யாரிட்டயும் உதவியென்று போனதில்லை.உதவி செய்யவருபவர்கள் பலர் தமது சுயநலத்திற்காக வருபவரும் உண்டு,தேவையில்லாமல் அவமானப்படக்கூடாது என்பதே என்ஆசை.,நான் கிளிநொச்சியில் உள்ள வாணிபம் ஒன்றில் கணக்காளர்வேலை பார்த்துவருகிறேன்,அந்த சிறுதொகை பணத்தை வைய்த்துத்தான் சாப்பாடுட்டுச்செலவு பிள்ளைகளிற்கு உடுப்பு,ரியூசன் காசு என்று எல்லாவற்றையும் சமாளிச்சுவருகிறேன்,

எனது கணவனை தெரியும் என்றுகூறி புலம்பெயர் தேசமொன்றில் இருந்து வந்திருந்த ஒருவர் கடந்தமாதம் என் வீட்டிற்கு வந்திருந்தார்,என் வீட்டிற்குவந்து உதவுவதாக கேட்டபோதுகூட நான் மறுத்துவிட்டேன்,இல்லை இது என்கடமை,நான் நிறைய உளைச்சு போதியளவு வச்சிருக்கிறன்,உங்களாலதான்நாங்கள் இன்று வீசாகிடைச்சு மகிழ்வா லீவிலவந்துபோறம்,ஓர்மாவீரனின் குடும்பத்திற்கு உதவ நான் கொடுத்தவச்சிருக்கணம் என்று பலகதைசொல்லி வந்தவன்தான் கண்ணன்,

சொல்லி மறுகிழமை ஓர் நல்இன பசுவும் கொட்டில்போட தகரமும் கொண்டுவந்து தந்துவிட்டுபோகும்போது மறுமுறை வரும்போது என் பிள்ளைகளிற்கு சொக்லேற் கொண்டுவருவதாக கூறியிருந்தான்,எனக்கு இவற்றில் உடன்பாடில்லை,என் இளைய மகனிற்கு சொக்லேற் என்றால் விருப்பம்,ஆனாலும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்,என் பிள்ளைகள் இருவரும் தனியார் வகுப்பிற்கு சென்றபின் நயவஞ்சக எண்ணத்தோடு வந்த கண்ணன்என் பிள்ளைகள் இல்லை என்பதை அறிந்துகொண்டு நாட்டிற்காக போராடப்போன மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காமல் தன்உடல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள என்னை பலவந்தபடித்தினான்,

நானும் பலபோராட்டம் நடத்தினேன்,எத்தனையோ நல்ல உள்ளங்கள் வெளிநாட்டில் இருந்துவந்து போராளி மாவீரர் குடும்பங்களிற்கு உதவி புரிந்துவிட்டு போகிறார்கள்,இவனைப்போல கேவலங்கெட்ட வக்கிரபுத்தியுடையவனை நான் காணேல.என்ன செய்வது கத்தினால்கூட பெண்ணை தப்பாக பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்,என்னைத்தான் தப்பாக கதைப்பார்கள்,இந்த கல்நெஞ்சம் கொண்டவனோடு போராடும்போதே வகுப்பு முடிந்து என் இளைய மகன் வந்திருந்தான்,கையில்கிடைத்த பூவாசால் எறிந்ததில் அவனுக்கு மண்டையும் உடைந்துவிட்டது,அந்தகோபமே அவன் என்னை மேலும் பலவந்தபடுத்தகாரணமாக அமைய்ந்துபோனது,எனது மகனைக்கண்டதும்தான் என்னை தள்ளிவிட்டு வெளியில் ஓடினான்

எனக்கு என்னசெய்வதென்றே தெரியாமல் போனது,ஓடிவந்த மகனை விலத்திவிட்டு அறைக்குள் சென்றுகதவை தாளிட்டேன். இளையமகன் வெளியில் நின்று அம்மா கதவை திறவுங்கம்மா பிளீஸ் அம்மா,கதவதிறவுங்கம்மா என்று கதறுவது கேட்டகிறது,அவன் பயந்துபோயிருக்கிறான் இன்று நான் கூறும் பதிலே அவனது எதிர்காலத்திற்கு உதவும்,அம்மாவை கொடுமைப்படுத்த நினைத்தவனை பழிவாங்கவேணும் என்று என்மகன் நினைக்ககூடாது,வெளிநாட்டக்காறனின் மாடு வீட்டில் நின்றால் என்மனம் இந்த நிலையில் இருந்துமீளாது,பணம் இருக்கின்றது என்பதற்காக விதவையை அனுபவிக்க துடிக்கிறானே, ஓர்மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காது இவளவு கீழ்த்தரமான சிந்தனையுடையவன் இன்று எனக்கு செய்ததுபோல்தானே நாளை இன்னொரு குடும்பத்திற்கு செய்யப்போகிறான்,.?

கடவுளே என்கணவன் தன்மனைவி பிள்ளைகளையே இரண்டாவதாக நேசித்தவன்,எம்மக்கள் சந்தோசமாக வாழவேணும் என்று வாழ்ந்துமடிந்துபோனவன்,ஆனால் இன்று அவன் குடும்பத்திற்கு மற்றவர்கள் தரும் கௌரவம்.....? மாட்டை காணும்பேதெல்லா அந்த காமுகனின் நினைவுதான்வரும்,

அதனால போய் மாட்டை அவிட்டு எங்காவது விட்டிட்டுவந்து என் செல்லமகனிற்கு நல்ல தெளிவான பதிலைக்கொடுக்கவேண்டும் என்று கதவைத்திறந்துவெளியே போகிறேன் தெளிந்த சிந்தனையோடு.

**பிரபாஅன்பு**

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.