தொண்டர் ஆசிரியர்களது முற்றுகை !

வட.மாகாண தொண்டர் ஆசிரியர்களது முற்றுகைக்குள் இருந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நிரந்த நியமனத்தை வழங்குமாறும், நிரந்தரமாக்கலுக்கான நேர்முகத் தேர்வுத் திகதியை உறுதிப்படுத்தி தெரிவிக்குமாறும் கோரி இன்று போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது தொண்டராசிரியர்கள் திடீரென வட.மாகாணசபையை முற்றுகையிட்டதுடன் சபை உறுப்பினர்கள் எவரையும் வெளியேற விடாது தடுத்து மறியற் போராட்டத்தை மேற்கொண்டனர்.
பிற்பகல் 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முற்றுகைப் போராட்டமானது மாலை 5 மணிவரை நீடித்துள்ளது. குறித்த போராட்டம் சமரசத்திற்கு கொண்டுவரப்படாமையை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் மாகாணசபை உறுப்பினருமான வை. தவநாதன் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கிக் கூறியிருந்தார்.
இதனையடுத்து டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதையடுத்து குறித்த விடயத்திற்கு தீர்வு காண இணக்கம் காணப்பட்டது.
இதன்படி ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்களுக்குமான நிரந்தர நியமனம் நாளை வழங்கப்படவுள்ள நிலையில், குறித்த நேர்முகத் தேர்வுக்கான திகதி அத்தினத்தன்றே அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் தெரிவித்ததையடுத்து மாகாணசபை உறுப்பினர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.