கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை, கோமரங்கடவெல வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மதவாச்சி சிங்கள
மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, கிழக்கு மாகாண  ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால்,  பிரதான கதவை மூடி, இன்று (23) காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியாளர்களாக உருவாக்க வேண்டுமென நினைக்கின்ற போதிலும் தங்களுடைய பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு எதுவித அபிவிருத்திகளும் செய்யப்படவில்லையென, அப்பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.
மதவாச்சி சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 11 வரை வகுப்புகள் காணப்படுவதாகவும் 294 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரி நின்றனர்.
இதேவேளை, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் திருகோணமலை - கண்டி பிரதான வீதியையும் வழி மறித்தமையால் அவ்வழிக்கான போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.