இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்களுக்கு இடம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் உள்ளூரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஒரே ஒரு 20 ஓவர்போட்டியில் ஆடுகிறது. அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று முதலில் மூன்று போட்டிகள் அடங்கிய 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகளுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் மோதும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இடது பின்னங்காலில் தசைநாரில் கிழிவு ஏற்பட்டு காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், அந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் இந்த தொடரிலும் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டு இருக்கிறார். இதே போல் காயத்தில் சிக்கியிருக்கும் கிறிஸ்வோக்சும் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜாக்பால் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர்களான சகோதரர்கள் சாம் குர்ரன், டாம் குர்ரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இருவரும் சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

இந்த தொடரில் இருவரும் ஒரே போட்டியில் களம் இறங்கினால், 1999-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நேரத்தில் சர்வதேச போட்டியில் ஆடிய இங்கிலாந்து சகோதரர்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.

இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.