விக்னேஸ்வரனுக்கு எதிராக நாடாளுமன்றில் டக்ளஸ்!

“வடமாகாணா முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுயநல அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாக, பதவிக் காலம் நிறைவுக்குப் பிறகும் தனக்கு பதவி நீடிப்புத் தேவை என கேட்கின்றார்”


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிக்காலம் முடிந்த பின்னரும் கால நீடிப்புச் செய்து முதலமைச்சர் பதவியை நீடித்துக்கொள்ள கோரிக்கை விடுத்திருப்பது வடக்கு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்கும் வரை அது மாகாணத்தின் ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கப்படும் என்பது நியதியாகும்.

பதவி ஆசையும், அந்தப் பதவியின் சுகபோகங்களுக்குள் இருந்து கொண்டு சுயநல அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாகவுமே பதவிக் காலம் நிறைவுக்குப் பிறகும் தனக்கு பதவி நீடிப்புத் தேவை என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கின்றார்.

போர் வடுக்களுடனும், பொருளாதார வறுமையோடும் வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு கடந்த ஐந்து வருடங்களில் அர்த்தபூர்வமாக எதையும் செய்யாத இவர் எதிர்காலத்தில் என்ன செய்வார்.

இந்நிலையில், வடக்கு மாகாண சபைக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததும் கால தாமதமின்றி உடனடியாக வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.