மாகாணத் தேர்தலுக்காக பெரும் கூட்டுக்கு முயற்சி
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்குவைத்து முன்னாள் அரச தலை
வர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொது எதிரணியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இந்த வருட இறுதிக்குள் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளில் அரசு களமிறங்கியுள்ளது. ஏற்கனவே சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளின் ஆயுள்காலம் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.
வடக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆயுள்காலமும் செப்ரெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது. இந்த ஆறு மாகாண சபைகளுடன் எஞ்சியுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை ஆரம்பத்தில் நடத்த முனைப்புகள் முன்னெடுக்கப்பட்ட போதும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் புதிய முறைமையின்கீழ் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக பழைய முறைமையின் கீழே மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை இலக்குவைத்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளை பொது எதிரணியினர் மேற்கொண்டுள்ளனர்.
பொது எதிரணியின் இந்தக் கூட்டணியில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளது தேசிய அரசிலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட சு.கவின் குறூப்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அதற்குப் பச்சைக்கொடி காட்டுவார் என்றும், விரைவில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பேச்சு ஆரம்பிப்பதற்காக நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பொது எதிரணியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது
கருத்துகள் இல்லை